Monday, October 22, 2012

ஒஷணிக்- 5

அந்த நாள் அக்டோபர் 22  ,2006 நான் முதன் முதலாக ஷம்கியா  என்ற  கப்பலில் பயணம் செய்த நாள் .நீங்கள் நினைப்பது போல் சொகுசு கப்பல் அல்ல ,இது சிறியவகை  கப்பல் .கார் முதலான வாகனங்களை இக்கரையில் இருந்து அக்கரையில் கொண்டு சேர்ப்பது . கப்பலில் முதன் முதலாக  செல்லும்  போது   யாராக  இருந்தாலும்  அவர்களுக்கு  தலைசுற்றல்  வாந்தி  ஏற்ப்படுவது இயல்பு ஆனால் ,எனக்கு  அவ்வாறு இல்லை .உற்சாகமாக இருந்தேன்  என்னுடன்  பணியில்  இருந்த  செல்லையா   இப்போதும்  வாந்தி  எடுப்பதாக  நண்பர்கள் சொல்கிறார்கள் .
           கடல் பயணம்  உற்சாகமாக  இருந்தபோதும்  ஒரு பயம் . நாம் திரும்பி வரவேண்டுமே ? என்னைக்காண  நண்பனோ ? தாயோ ? உடன் பிறப்புகளோ ? காத்திருப்பார்களே !. நான் இருப்பது அரபு தேசம் ஆனாலும்  இந்தியாவில்   எனக்காக  காத்திருக்க தானே செய்வார்கள் . எல்லா  தெய்வங்களையும்  நினைத்துக்கொண்டு  செல்வதுண்டு .ஒருநாள்  மட்டும்  அல்லவே  எனக்கு வேலை  கப்பலில்தான் .
தினமும்  அதிகாலை  மசிராஹ்   தீவில் இருந்து  சன்னாஹ்  தீப கற்பத்திற்கு  செல்ல வேண்டும்  .பயணம்  2 மணிநேரம் தான்  .40  மைல்  தொலைவு .சிலதினங்கள்  இரு முறை செல்ல வேண்டிவரும் .
அவ்வாறு செல்லும்போது  சில சமயம் கொடுங்காற்று   அடிக்கும் .கப்பல் தள்ளாடும் .எனக்கு   M G R  பாட்டு  மனதில் உதிக்கும்  "தரை மேல் பிறக்கவைத்தான்  ' என்ற பாடலை  முணுமுணுப்பதுண்டு . ஒருநாள்  நடு  கடலில்  சென்று கொண்டிருந்த பொது  கடுமையான  மழை  சூறைக் காற்று ,கடல் சீற்றம் . எனக்கு சீனியரான  பல  தொழிலாளிகள் கூட  பயந்து போய்விட்டார்கள் .பாபா என்ற  பாகிஸ்தானி  அழுதுவிட்டன்  ," எனக்கு நீச்சல் தெரியாது '  என்று கூறி . எனக்குமட்டும்  தெரியுமாக்கும்  என்று மனதிற்குள்  புலம்பினேன் .
சென்ற  வாரம் தான்  ஊரில் உள்ள நண்பன் முத்தப்பா விற்கு போன் போட்டு சொன்னேன் .நண்பா  எனக்கு  கப்பலில் வேலை கிடைச்சிருக்குன்னு .அவனோ  ' உன் சாவு  கடலில்தான்னு  எழுதி இருந்தா  யாரால தடுக்க முடியும்?"  அப்படி  சொல்லிப்புட்டான் . அதுமட்டுமா ? கப்பல் இடையில் நின்றால்  இறங்கி  தள்ளனுமே  என்று  கவுண்டமணி  திரைப்படத்தில் கூறியதை  எடுத்துவிட்டான் .ஒரு வழியாக  கரை சேர்ந்தோம் .

                      எங்களுக்கு  உணவு ,உறக்கம்  எல்லாம்  கப்பலில் தான் .ஓய்வு  நேரத்தில்   அங்கு இருந்தபடியே  மீன் பிடிப்பேன் .நான் எப்போது தூண்டில் போட்டாலும்  மீன் கிடைக்கும் .அது என் ராசிதான் . பிறகென்ன   பலுசிஸ்தானி   ரமீஸ்   நன்றாக  குழம்பு  வைப்பான் .நான் நன்றாக  சாப்பிடுவேன் . பாகிஸ்தான்  காரன்தான்  ஆனாலும்  சும்மா சொல்லக் கூடாது  கைப்பக்குவத்தை .
அன்றைய தினம்  கொரியன் மீன் பிடிக்  கப்பல் ஒஷணிக்- 5  நடுக்கடலில்  எங்களுக்காக  காத்திருந்தது .எங்கள் கப்பலில் டீஸல்  டாங்கில்  டீசல்  நிரப்பி  அவர்களுக்கு  விற்பதற்காக  செல்ல விருந்தோம் .வானம்  கருத்திருந்தது .ஒரு சில வெள்ளைக் காகங்கள்  வட்டமடித்து  சென்றது .பிஸ்கட்  , பச்சை ஆப்பிள் ,பெப்சி  ஒன்றும்  ஸ்டாக்  இல்லை .காரணம் கரையில் நேற்று  வாங்கவேண்டிய  பொருட்கள்  ஒன்றும்  வாங்கவில்லை ,கேப்டன்  உம்மர்  கொடுத்த  பியரை   குடித்ததுதான் கடை வீதி  செல்ல முடியாமல் போனது  .பாக்கெட்டை  தொட்டுப்பார்த்தேன்  9 சிகரட்  மீதம் இருந்தது. புறப்பட்டோம்
           சரியாக  2 மணி நேரத்தில்  நடுக்கடலில்  ஒஷணிக்- 5 ஐ  அடைந்தோம் .எங்கள் கப்பலில் இருந்து கயிற்றை   ஒஷணிக்- 5 ஐ நோக்கி  வீசினோம்  அவர்கள்  அதை  கைப்பற்றி  அவர்கள் கப்பலில்  நன்றாக  கட்டினர் .அதுபோல்  அவர்களது  கயிறை   எங்கள்  கப்பலில் கட்டி  இணைத்தோம்  இவ்வாறு  செய்வது தான்  மரபு .  டீசல்   அடிக்க  தொடங்கினோம்  மழையும்  தொடங்கியது .இப்போது  அடிக்கும்  காற்றை  விவரிக்க  இயலாது . சூரைக் காற்றோ?  சுழல்  காற்றோ ? ராமேஸ்வரம்  மீனவர்களுக்கே  வெளிச்சம் .

 பாபா  நடுங்கி விட்டான்  வழக்கம் போல .என்னிடம் இருந்த  சிகரட்  எல்லாம்  முடிந்து விட்டது .கொரியாக் காரன்  12 பெப்சியும்  5 கிலோ  நெய்மீனும்  தந்தான் அன்பளிப்பாக?. டீசல்  அடித்து  முடிந்தது கரைக்கு திரும்பும் போது   கேப்டன்  உம்மர்  சொன்னார்  " போன மாசம்  இந்த கொரியா  கப்பலில்  ஒரு  மர்டர்   நடந்துச்சு"    " கொலை செய்து   பிரீசர்ல  பாடிய போட்டுருக்கான் "  கேஸ்  நடப்பதாக  கூறினார் .நான்  வெல வெலத்து போனேன் .  பாவம்  அவனுக்கு  யார் யார்  காத்திருப்பார் களோ ?

Thursday, October 18, 2012

தூங்கப்போறேன் !

நான் பகரின்  சென்றபின்  முதல்  இருமாதங்கள்  எனக்கு  வேலை  கிடைக்க வில்லை .Free  விசா  எனப்படும்  முறையில்  சென்றதால்  எங்கு வேண்டுமானாலும்  வேலை தேடலாம் .ஒருநாள்  அவ்வாறு  வேலை தேடித் தேடி  அலைந்த களைப்பில்  சிறிது நேரம்  தூங்கலாம்  என்று எனது அறைக்கு வந்தேன் . நீண்டநாட்களாக  வேலை  தேடி அலைந்த நான்  எனது அறையில்  சட்டை மாட்டுவதற்கு  ஒரு ஆணி அடித்தேன் .அதற்க்கு கூட நேரமில்லாமல்  வேலை தேடி அலைந்துள்ளேன் .
ஆணி அடிக்கும்  சப்தம் கேட்டு  பக்கத்து  அறை  மலையாளி  நண்பர்கள்  எனது அறைக்கதவை  தட்டினார்கள் .நான் நினைத்தேன்  நம்ம ஊருலதான்   வாடகை வீட்டு சுவரில்  ஆணி அடிச்சா  வீட்டுக்காரர் பிரச்சனையை  கிளப்புவார்  இங்கேயுமா ? என்று நினைத்தேன்  ஆனாலும் நான் விடுவதாக இல்லை . இன்று  ஆணி அடித்தபின் தான்  கதவை  திறக்க வேண்டும்  என்று முடிவெடுத்தேன் .
      அவர்களும்  விடுவதாக இல்லை,தொடர்ந்து  கதவு தட்டப்பட்டது . ஒரு ஆள்  மட்டும்  சத்தமாக கேட்டார்    "உள்ளே என்ன செய்கிறாய் ?" என்று
நான் "  நான் தூங்கப்போறேன்  ஆணி அடிக்கிறேன்  என்று சொன்னேன். அவ்வளவுதான்   அனைவரும்  தூங்காதே !   தூங்காதே ! !  என்று  கூச்சலிட்டனர் . இதற்குள்  எனது  அண்ணனிடம்  தகவல்  சென்றது  அவரும் பதறி  அடித்துக்கொண்டு  வந்துவிட்டார் . சரியாக  அந்நேரம்  கதவை திறந்தேன் .
அனைவரும்  என்னை சூழ்ந்துகொண்டு  அறிவுரை  சொல்ல  ஆரம்பித்து விட்டார்கள்  இவ்வாறு    " தம்பி உனக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும் " ,       " இதற்க்கெல்லாம்  சாகத் துணியலாமா ?"  என்று
      அடப்பாவிகளா !  நான் என்ன  தற்கொலைக்கா   முயற்சி பண்ணினேன் ?  என்று கேட்டேன் . பிறகுதான்  தெரிந்தது  தூங்கப்போறேன்  என்றால்  தூக்கு மாட்டிக்க  போறேன்  என்று  மலையாளத்தில்  பொருள் என்று .
        பிறகு  அவர்களிடம்  சொன்னேன்  இவ்வாறு    " சரி  சரி   இப்ப  சொல்றேன்   கொஞ்சநேரம்  நிம்மதியா  தூங்கப்போறேன் !"


Friday, October 12, 2012

கனவு

     
                                கனவு 
    அன்று டக்குத்தெரு  மாரியம்மன்  கோவிலில் இருந்து  பூசாரி  காளிமுத்து  வந்திருந்தார்  எனது வீட்டிற்கு .

அவர் வந்த காரியம் இதுதான் , பூசாரியின் கனவில்  மாரியம்மன்  தோன்றி  என்  அம்மா  ஒரு குடம்  பால்  கொண்டுவருவது போல்  கனவு  கண்டாராம் . அதுபோல்  செய்யவேண்டும்  என்று  அறிவுறுத்த  வந்ததாக  கூறினார் .எனக்கு  சிரிப்பு வந்தது  ஆனால்  அடக்கிக்கொண்டேன் . பெரியவர்கள்  பேசும்போது  குறுக்கே பேசக்கூடாது  என்று  அம்மா  முன்பு  கூறியிருக்கிறார் .
   பூசாரி  போன பிறகு  அம்மாவிடம்  சொன்னேன்  இது  மூட நம்பிக்கை ,அவ்வாறு  செய்யவேண்டாம்  என்று  ஆனால்  அம்மா  என் பேச்சை கேட்கவில்லை . அவ்வாறு  செய்யாவிடின்  மாரியம்மன்  பலி வாங்கிவிடும்  என்று  சொன்னார்கள் . இதையும் பூசாரிதான்  சொல்லியிருக்க  வேண்டும் .
         அதுவும்  பித்தளை  குடத்தில் தான்  பால் கொண்டுவரவேண்டும்  என்று  சொன்னதாக  அம்மா  என்னிடம்  கூறினார் .இந்த நேரத்தில்  அந்த பூசாரியின்  ஞாபக  சக்தியை  மெச்சினேன் ! காரணம்   அந்த  பால் குடம்  எவர்சில்வரா ?  பித்தளையா ? என்று கனவில் கூட அந்த பூசாரி கவனத்தில் கொண்டுள்ளார்  அதனால்  கும்பகோணம்   சென்று  ஒரு பித்தளை  குடம்  வாங்கினோம் .
மறுநாள்  மாரியம்மன் கோவிலுக்கு சென்று  அவர் கூறியபடி  பால் குடத்தை  ஒப்படைத்து ,மாரியம்மன்  ஆசையை (?)  நிறைவேற்றி  அருள் பெற்று வந்தோம்(?) ! !
   மனிதனின்  ஆசையை  அவரவர்  பேச்சில்  அறியலாம் . ஆனால்  இறைவனின் ? ஆசையை அறிவது கடினம்  ,இது போல  பூசாரிகளின்  மூலமாகத்தான்  தெய்வம்  தெரிவிக்கும்  என்று  என் அம்மா நம்பிவந்தார் .

       நாம் காணும்  கனவுகள்  மெய்ப்பட வேண்டும் என்று  எல்லோரும்  விரும்புவது  இயல்புதான். ஆனால்  நல்ல கனவுகள் மட்டும்  நடக்க வேண்டும் என்று  நினைப்பது  சுயநலம்  என்று நான் நினைக்கவில்லை .நான் ஒருநாள்  கண்ட கனவு  ஒரு பெரிய பயத்தை உண்டாக்கியது ,நான்  தேம்பித் தேம்பி  அழுகிறேன்,என்னை சுற்றி  என் உறவினர்  உடன்பிறப்புக்கள்  அனைவரும்  அழுகின்றனர் .இவ்வளவு ஏன் அங்கு  பிணமாக  கிடப்பது கூட  நான்தான் ,என்  சாவிற்கு  நான் அழுவது  கனவில் மட்டுமே நடக்க கூடியதுதான் .அதனால்  பயம் தெளிந்தது .
ஒருநாள்  எதோட்சையாக  மாரியம்மன்  கோவில் வழியாக சென்றபோது  கோவில் குளத்தில் பூசாரி  குளித்துக் கொண்டிருந்தார்  நாம் வழங்கிய  குடத்தைப் பயன்படுத்தி . இதை  அம்மாவிடம்  சொல்லவில்லை  ஆனால்  வேறொன்று சொன்னேன்   
    " நம்ம நேரம்   பூசாரி  பால் குடத்தை மட்டும் தான்  கனவு கண்டார் !  அல்லாமல்  கோவில்  கட்டுவதுபோல்   கனவு வரவில்லை !.