Saturday, July 28, 2012

தூ (து) க்கத்தில் நடந்தேன் !

தூ (து) க்கத்தில்  நடந்தேன் !
தூக்கத்துல  நடக்கின்ற  வியாதி பற்றி  கேள்விப்பட்டு  இருப்பீர்கள் .நானும்  தூக்கத்தில்  எழுந்து நடப்பதுண்டு .பத்து ஆண்டுகட்கு முன்  தினமும்  இரவில்  2 மணியளவில்  என் வீட்டு  முன் கதவு  திறந்து  வெளியில்  சென்று  உலாவிவிட்டு வருவேன் . இதை என் அம்மா  கண்டுபிடித்து  சொல்லித்தான்  எனக்குத் தெரியும் . அதுமட்டுமல்லாமல்  நான் தூக்கத்தில்   யார்  எது கேட்டாலும்  எடுத்து  கொடுத்துவிடுவேன் . இன்னார்தான்   இதை  என்னிடம் இருந்து  பெற்றார்கள்  என்ற  நினைவு  கூட  இருக்காது .
ஒருநாள்  அவ்வாறு  நான் தூக்க கலக்கத்தில்  இருந்தபோது , என்னிடம்  VCR  ஐ  பெற்றுக்கொண்டு  ஒரு நண்பர்  சென்று விட்டார் . ஆனால்  அவர்  யார் ?  என்று  தெரியவில்லை . நன்றாக  யோசித்துப் பார்த்தும்  நினைவுக்கு  வரவில்லை .சில நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன் ,அவர்கள்  வாங்கவில்லை என்று சொன்னார்கள் .அதுமட்டுமல்லாமல்  இதுபற்றி  யாரிடமும்  சொல்ல  வேண்டாம் என்றனர் . வாங்கியவர்  தானாகவே  தரும் வரை காத்திருக்க  சொன்னார்கள் .  காத்திருந்தேன் .
இருந்தாலும்  நான்   தூக்கத்தில்  நடப்பது  எனக்கு  ஒரு பயத்தை  உண்டாக்கியது . உறக்கம்  என்பது  இறைவன்  தந்த  வரமாகவே நான் கருதுகிறேன் . காரணம்  இன்றைய  காலகட்டத்தில்  எத்தனை பேர் தூக்கம்  இன்றி  தவிக்கின்றனர்  என்பது  கண் கூடாக  காணலாம் . ஒவ்வொருவர்க்கும்  ஒவ்வொரு  கவலை , சிலருக்கு  வியாதியின் காரணமாக  உறக்கமின்மை ,  சிலருக்கு  வயது  முதிர்வு  காரணமாக  உறக்கமின்மை ,சிலருக்கு  பயம்  காரணம் ,சிலருக்கு  பணம்  காரணம் .
      பல  சமயங்களில்   பகலில்  கூட  அருமையான  தூக்கம் வரும் ,தூங்கியிருக்கிறேன் .ஒவ்வொரு முறை  தூங்கி எழும்போது   ஒரு  சுகம் . 2003  இல்  கோயம்புத்தூர்  ஜிம்சன்   வாட்ச் கம்பனியில்  வேலை  பார்த்தபோது , நண்பர்  நிவாஸ் கான்   தினமும்  2 மணிக்கு பிறகு  நல்ல தூக்கம் போடுவார்  பணியில்?  இருக்கும் போது  தான் . நான்  சொல்வேன்  " தூங்குங்க!   நிவாஸ்  தூங்குங்க !  தூக்கம்  என்பது  இறைவன்  கொடுத்த வரம்"  என்று .
    அதைவிட   மஸ்கட்டில்  இருந்தபோது   கடின  உடல் உழைப்பு  , எப்போது  1 மணியாகும்  என்று  காத்திருப்பேன் ,1 மணிக்கு  சாப்பிட்டு முடித்து  சிறிது நேரம்  தூங்குவேன் . இரண்டு மணிக்கு  மீண்டும்  வேலை  தொடங்கும் .
ஆனால்  தற்போது  பகலில்  தூங்கும்  பழக்கம்  எனக்கு  அடியோடு  மாறிவிட்டது .ஏதாவது ஒரு ஞாயிறு  பகல்  தூங்கினால்  இரவில்  தூக்கம் வருவதில்லை .
    மீண்டும் VCR  மேட்டருக்கு  வருவோம் . அதுபோல்  ஒருநாள்  பகலில்  நல்ல தூக்கம்  4  மாதம் கழித்து  அந்த  நண்பர்   என்னை  எழுப்பினார் ,   VCR ஐ  திருப்பி  தந்துவிட்டு  சென்று விட்டார் .தூக்க கலக்கத்தில் மீண்டும்   தூங்கிவிட்டேன் .
நன்றாக  தூக்கம்  கலைந்தபின்   யோசித்துப் பார்த்தேன் . VCR  ஐ  திருப்பி தந்தது  யார் ?  இன்றுவரை   அது  புதிர் தான் !.

Thursday, July 5, 2012

குறுஞ்செய்தி

நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வேணும்  என்பார்கள் .எனக்கு குறைந்த அளவு  நண்பர்கள்  இருந்த போதும் ,நாலு பேர்  நெருக்கமான  நண்பர்கள்  இருந்தனர் .ஆனால் அவர்கள் இருக்கும் இடம்தான்  தொலைவு .
கேரளா  வந்து தங்கிவிட்டதால்  அவர்களும் இங்கு வருவதில்லை  நானும் கோவை செல்லும்போது  அவர்களை காண முடிவதில்லை . ஆனாலும் எனது  திருமனத்திற்கு அவர்களை  அழைத்தேன்
மின் அஞ்சலில்  அழைப்பிதல்  அனுப்பினேன் ,செல்பேசியில் குறுஞ்செய்தியும்  அனுப்பினேன் .
  தற்காலத்தில்  குறுஞ்செய்தி  மிக பயனுள்ளதாகவே  நான் உணருகிறேன். பழைய  நாட்களில்  நண்பர்களுக்கு கடிதங்கள் பல எழுதியதுண்டு .அது ஒரு சுகமான  அனுபவம் . இக்காலதவர்க்கு
அது கிடைக்க வாய்ப்பில்லை .
பல நாட்கள்  யாரிடமிருந்தோ வரும் கடிதத்திற்கு  காலைமுதல் தபால்காரரை  காத்திருந்து ,அவர் 
நம்மை  கடந்து போகும் வரை  கண்கள் அசைவற்று இருந்துள்ளேன் . சில சமயம் எங்காவது  சென்று  பின் வீடு திரும்பும்போது  கடிதம் எதாவது ? என்று  வினவுவேன் . தற்போது கூட  சிலசமயம் கடந்த காலத்தில் நண்பர்கள் அனுப்பிய  கடிதத்தை  மீண்டும்  எடுத்துப் படித்துப் பார்ப்பேன். குறுஞ்செய்தியில்  உடனுக்குடன்  தகவல் சென்று சேர்க்கிறது ,மற்றபடி  அன்பை அதிகமாக  பரிமாறிக்கொள்ள முடிவதில்லை .சில குறுஞ்செய்திகள்  பலருக்கு ஒரே சமயத்தில் அனுப்பப் படுகிறது .அதில் பல  கருத்துக்கள்  இருந்தாலும் , அதை முதலில் எழுதியது யார் ? என்பது  விடை  இல்லா கேள்வி .

       கடிதம் என்றவுடன்  மனது எங்கோ சென்று விட்டது .மீண்டும் நம்ம கதைக்கு வருகிறேன் .அந்த  நான்கு நண்பர்களுக்கு  மீண்டும்  ஒரு  நினைவூட்டல்  குறுஞ்செய்தியை இவ்வாறு அனுப்பினேன்
" அன்பு நண்பரே ! எனது  திருமணம்  வரும் 18 .01 .2009 .இது ஒரு நினைவூட்டல்  தங்கள் வருகைக்கு காத்திருக்கும் நண்பன் "
ஆனால் அந்த நால்வரும் வரவில்லை ஏதோ காரணத்தால் .நால்வருக்கும்  நாலு காரணங்கள் இருக்குமல்லவா .
ஆனாலும் திருமணம் முடிந்தபின்  என் நன்றி  குறுஞ்செய்தியை தவறாது  பின்வருமாறு   அனுப்பினேன்   "  எனது  திருமனத்திற்கு வந்து  வாழ்த்திய  அன்பு  நெஞ்சத்திற்கு எனது  மனமார்ந்த நன்றி " .

சிறுகுறிப்பு : ஒருவேளை  அவர்கள் வந்திருந்தால்  எனது குறுஞ்செய்தியின்  கடைசி  மூன்று  எழுத்துக்களை  மட்டுமே அனுப்பியிருப்பேன் .இந்த குறுஞ்செய்தியை கண்டு ஒரு நண்பர் மட்டும் செல்பேசியில் அழைத்து  இப்படி சொல்லி விட்டார்  " நண்பா  நாக்க புடுங்கறமாதிரி  மெசேஜ்  அனுப்பிட்ட  , இதுக்கு என்னை செருப்பால்  அடித்திருக்கலாம் " என்று .
நான் சொன்னேன்  "  மன்னிக்கவும்  நண்பா  ராங் கால் போன்று இது  ராங்  sms  திருமனத்திற்கு  வந்தவர்க்கு  அனுப்பியது   உங்க பேருக்கும்  ஆட்ஆயிடுச்சு ."