சிங்கப்பூரான் வீரமுத்து என்றால் எல்லோருக்குமே தெரியும் . ஆனால் வீரமுத்து சிங்கப்பூர் சென்றது கிடையாது .அனுதினம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் யாரிடமாவது சிங்கப்பூர் பொருட்களைப்பற்றி பேசாமல் இருந்தது கிடையாது .ஒரு நாள் என்னிடம் முதன் முதலாக சிங்கப்பூர் வேட்டி யை குறித்து பேச்சை தொடங்கினார் .ஒரு வேட்டியை என்னிடம் காண்பித்து அவரிடம் இதுபோல் ஐந்து சிங்கப்பூர் வேட்டி இருப்பதாக கூறினார் .நல்ல விஷயம் தான் ஆனால் அவர் இவ்வாறு கூறுவது என்னிடம் மட்டும் அல்ல .ஊர் பொதுமக்கள் யாராக இருந்தாலும் இப்படி அவர் வாங்கிய பொருட்களைப்பற்றி எடுத்து விடுவார் .
ஒருநாள் கமால் பாய் கடையில் டீக்குடிக்க சென்றபோது அவர் கட்டியிருந்த சிங்கப்பூர் பெல்ட் ஐ பற்றி பெருமிதமாக பேசினார் நான் அதை ஆமோதித்து அதிசயித்து புகழ்ந்து பேசினேன் .அதன் பலனாக நான் குடித்த டீக்கும் அவர் காசு கொடுத்தார் ,அவரது புதிய சிங்கப்பூர் பெல்டில் இருந்து காசை எடுத்தார். இவர் விடும் கதைகளை கேட்டு எனக்கும் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தது .ஆனாலும் சிங்கப்பூரான் வீரமுத்து வுக்கு இந்த பொருட்கள் எப்படி கிடைக்கிறது என்பதை அறிய ஆவலாக இருந்தேன் . அவரிடம் ஒருமுறை இதுபற்றி கேட்டபோது அய்யம்பேட்டையில உள்ள மச்சான் வாங்கி தந்ததாகவும் ஒவ்வொரு ஐட்டமும் விலை அதிகம் என்று மட்டுமே சொன்னார் .
எனக்கு நன்றாக நினைவு உள்ளது 1991 மே 22 தினசரிகளில் தலைப்பு செய்தி ராஜீவ் காந்தி தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். கமால் பாய் கடையில் பெரும் கூட்டம்
அன்று வீரமுத்து பலருக்கும் டீ உபயம் கொடுத்தார் .அன்று புதிய சிங்கப்பூர் கை கடிகாரம் அணிந்து வந்திருந்தார் . ராஜீவ் காந்தி இறந்த சோக செய்தியில் வீரமுத்துவின் புதிய கடிகாரத்தை யாரும் சட்டை செய்யவில்லை .எனக்கு மட்டும் பிடித்திருந்தது .தூரத்தில் இருந்து அந்தோணிராஜ் முறைத்துக் கொண்டிருந்தார் .அவருக்கும் வீரமுத்து வுக்கும் ஆகாது .ஒருமுறை சிங்கப்பூர் லுங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டார் அந்த கடுப்புதான் .
ஒருநாள் என் தந்தை அய்யம்பேட்டைவரை சென்று சிங்கப்பூர் வேட்டி வாங்குவதற்காக வீரமுத்து வின் மச்சானை பார்க்கசென்றார் .அங்கு சென்று அவரை சந்தித்து ஒரு வேட்டி யும் கோடாலி தைலமும் பெற்று வந்தார் .கூடவே ஒரு உபரி தகவலும் கொண்டுவதார் அது அவர் வீரமுத்து வின் மச்சான் அல்ல என்பதே .
அன்றைய தினம் அந்தோணிராஜ் தன் அன்பிற்குரிய ஒருவருக்கு இடிமுடி வாங்கி வந்திருந்தார் .அவரும் அய்யம்பேட்டை சென்று சிங்கப்பூர் புரோக்கரிடம் தான் இதை வாங்கி வந்திருந்தார் .நேராக கமால் பாய் கடைக்கு வந்தார் அங்கே வீரமுத்து தன்னுடைய சிங்கப்பூர் ஜட்டி குறித்து என்னுடன் பெருமையாக பேசிக்கொண்டிருந்தார் .அப்போது அங்குவந்த அந்தோணிராஜ் வீரமுத்து விடம் அதை காண்பித்து " இத பாருயா ம_ரு! இது சிங்கப்பூரு ம_ரு !" என்றார் .