Thursday, October 18, 2012

தூங்கப்போறேன் !

நான் பகரின்  சென்றபின்  முதல்  இருமாதங்கள்  எனக்கு  வேலை  கிடைக்க வில்லை .Free  விசா  எனப்படும்  முறையில்  சென்றதால்  எங்கு வேண்டுமானாலும்  வேலை தேடலாம் .ஒருநாள்  அவ்வாறு  வேலை தேடித் தேடி  அலைந்த களைப்பில்  சிறிது நேரம்  தூங்கலாம்  என்று எனது அறைக்கு வந்தேன் . நீண்டநாட்களாக  வேலை  தேடி அலைந்த நான்  எனது அறையில்  சட்டை மாட்டுவதற்கு  ஒரு ஆணி அடித்தேன் .அதற்க்கு கூட நேரமில்லாமல்  வேலை தேடி அலைந்துள்ளேன் .
ஆணி அடிக்கும்  சப்தம் கேட்டு  பக்கத்து  அறை  மலையாளி  நண்பர்கள்  எனது அறைக்கதவை  தட்டினார்கள் .நான் நினைத்தேன்  நம்ம ஊருலதான்   வாடகை வீட்டு சுவரில்  ஆணி அடிச்சா  வீட்டுக்காரர் பிரச்சனையை  கிளப்புவார்  இங்கேயுமா ? என்று நினைத்தேன்  ஆனாலும் நான் விடுவதாக இல்லை . இன்று  ஆணி அடித்தபின் தான்  கதவை  திறக்க வேண்டும்  என்று முடிவெடுத்தேன் .
      அவர்களும்  விடுவதாக இல்லை,தொடர்ந்து  கதவு தட்டப்பட்டது . ஒரு ஆள்  மட்டும்  சத்தமாக கேட்டார்    "உள்ளே என்ன செய்கிறாய் ?" என்று
நான் "  நான் தூங்கப்போறேன்  ஆணி அடிக்கிறேன்  என்று சொன்னேன். அவ்வளவுதான்   அனைவரும்  தூங்காதே !   தூங்காதே ! !  என்று  கூச்சலிட்டனர் . இதற்குள்  எனது  அண்ணனிடம்  தகவல்  சென்றது  அவரும் பதறி  அடித்துக்கொண்டு  வந்துவிட்டார் . சரியாக  அந்நேரம்  கதவை திறந்தேன் .
அனைவரும்  என்னை சூழ்ந்துகொண்டு  அறிவுரை  சொல்ல  ஆரம்பித்து விட்டார்கள்  இவ்வாறு    " தம்பி உனக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும் " ,       " இதற்க்கெல்லாம்  சாகத் துணியலாமா ?"  என்று
      அடப்பாவிகளா !  நான் என்ன  தற்கொலைக்கா   முயற்சி பண்ணினேன் ?  என்று கேட்டேன் . பிறகுதான்  தெரிந்தது  தூங்கப்போறேன்  என்றால்  தூக்கு மாட்டிக்க  போறேன்  என்று  மலையாளத்தில்  பொருள் என்று .
        பிறகு  அவர்களிடம்  சொன்னேன்  இவ்வாறு    " சரி  சரி   இப்ப  சொல்றேன்   கொஞ்சநேரம்  நிம்மதியா  தூங்கப்போறேன் !"


2 comments: