Monday, October 22, 2012

ஒஷணிக்- 5

அந்த நாள் அக்டோபர் 22  ,2006 நான் முதன் முதலாக ஷம்கியா  என்ற  கப்பலில் பயணம் செய்த நாள் .நீங்கள் நினைப்பது போல் சொகுசு கப்பல் அல்ல ,இது சிறியவகை  கப்பல் .கார் முதலான வாகனங்களை இக்கரையில் இருந்து அக்கரையில் கொண்டு சேர்ப்பது . கப்பலில் முதன் முதலாக  செல்லும்  போது   யாராக  இருந்தாலும்  அவர்களுக்கு  தலைசுற்றல்  வாந்தி  ஏற்ப்படுவது இயல்பு ஆனால் ,எனக்கு  அவ்வாறு இல்லை .உற்சாகமாக இருந்தேன்  என்னுடன்  பணியில்  இருந்த  செல்லையா   இப்போதும்  வாந்தி  எடுப்பதாக  நண்பர்கள் சொல்கிறார்கள் .
           கடல் பயணம்  உற்சாகமாக  இருந்தபோதும்  ஒரு பயம் . நாம் திரும்பி வரவேண்டுமே ? என்னைக்காண  நண்பனோ ? தாயோ ? உடன் பிறப்புகளோ ? காத்திருப்பார்களே !. நான் இருப்பது அரபு தேசம் ஆனாலும்  இந்தியாவில்   எனக்காக  காத்திருக்க தானே செய்வார்கள் . எல்லா  தெய்வங்களையும்  நினைத்துக்கொண்டு  செல்வதுண்டு .ஒருநாள்  மட்டும்  அல்லவே  எனக்கு வேலை  கப்பலில்தான் .
தினமும்  அதிகாலை  மசிராஹ்   தீவில் இருந்து  சன்னாஹ்  தீப கற்பத்திற்கு  செல்ல வேண்டும்  .பயணம்  2 மணிநேரம் தான்  .40  மைல்  தொலைவு .சிலதினங்கள்  இரு முறை செல்ல வேண்டிவரும் .
அவ்வாறு செல்லும்போது  சில சமயம் கொடுங்காற்று   அடிக்கும் .கப்பல் தள்ளாடும் .எனக்கு   M G R  பாட்டு  மனதில் உதிக்கும்  "தரை மேல் பிறக்கவைத்தான்  ' என்ற பாடலை  முணுமுணுப்பதுண்டு . ஒருநாள்  நடு  கடலில்  சென்று கொண்டிருந்த பொது  கடுமையான  மழை  சூறைக் காற்று ,கடல் சீற்றம் . எனக்கு சீனியரான  பல  தொழிலாளிகள் கூட  பயந்து போய்விட்டார்கள் .பாபா என்ற  பாகிஸ்தானி  அழுதுவிட்டன்  ," எனக்கு நீச்சல் தெரியாது '  என்று கூறி . எனக்குமட்டும்  தெரியுமாக்கும்  என்று மனதிற்குள்  புலம்பினேன் .
சென்ற  வாரம் தான்  ஊரில் உள்ள நண்பன் முத்தப்பா விற்கு போன் போட்டு சொன்னேன் .நண்பா  எனக்கு  கப்பலில் வேலை கிடைச்சிருக்குன்னு .அவனோ  ' உன் சாவு  கடலில்தான்னு  எழுதி இருந்தா  யாரால தடுக்க முடியும்?"  அப்படி  சொல்லிப்புட்டான் . அதுமட்டுமா ? கப்பல் இடையில் நின்றால்  இறங்கி  தள்ளனுமே  என்று  கவுண்டமணி  திரைப்படத்தில் கூறியதை  எடுத்துவிட்டான் .ஒரு வழியாக  கரை சேர்ந்தோம் .

                      எங்களுக்கு  உணவு ,உறக்கம்  எல்லாம்  கப்பலில் தான் .ஓய்வு  நேரத்தில்   அங்கு இருந்தபடியே  மீன் பிடிப்பேன் .நான் எப்போது தூண்டில் போட்டாலும்  மீன் கிடைக்கும் .அது என் ராசிதான் . பிறகென்ன   பலுசிஸ்தானி   ரமீஸ்   நன்றாக  குழம்பு  வைப்பான் .நான் நன்றாக  சாப்பிடுவேன் . பாகிஸ்தான்  காரன்தான்  ஆனாலும்  சும்மா சொல்லக் கூடாது  கைப்பக்குவத்தை .
அன்றைய தினம்  கொரியன் மீன் பிடிக்  கப்பல் ஒஷணிக்- 5  நடுக்கடலில்  எங்களுக்காக  காத்திருந்தது .எங்கள் கப்பலில் டீஸல்  டாங்கில்  டீசல்  நிரப்பி  அவர்களுக்கு  விற்பதற்காக  செல்ல விருந்தோம் .வானம்  கருத்திருந்தது .ஒரு சில வெள்ளைக் காகங்கள்  வட்டமடித்து  சென்றது .பிஸ்கட்  , பச்சை ஆப்பிள் ,பெப்சி  ஒன்றும்  ஸ்டாக்  இல்லை .காரணம் கரையில் நேற்று  வாங்கவேண்டிய  பொருட்கள்  ஒன்றும்  வாங்கவில்லை ,கேப்டன்  உம்மர்  கொடுத்த  பியரை   குடித்ததுதான் கடை வீதி  செல்ல முடியாமல் போனது  .பாக்கெட்டை  தொட்டுப்பார்த்தேன்  9 சிகரட்  மீதம் இருந்தது. புறப்பட்டோம்
           சரியாக  2 மணி நேரத்தில்  நடுக்கடலில்  ஒஷணிக்- 5 ஐ  அடைந்தோம் .எங்கள் கப்பலில் இருந்து கயிற்றை   ஒஷணிக்- 5 ஐ நோக்கி  வீசினோம்  அவர்கள்  அதை  கைப்பற்றி  அவர்கள் கப்பலில்  நன்றாக  கட்டினர் .அதுபோல்  அவர்களது  கயிறை   எங்கள்  கப்பலில் கட்டி  இணைத்தோம்  இவ்வாறு  செய்வது தான்  மரபு .  டீசல்   அடிக்க  தொடங்கினோம்  மழையும்  தொடங்கியது .இப்போது  அடிக்கும்  காற்றை  விவரிக்க  இயலாது . சூரைக் காற்றோ?  சுழல்  காற்றோ ? ராமேஸ்வரம்  மீனவர்களுக்கே  வெளிச்சம் .

 பாபா  நடுங்கி விட்டான்  வழக்கம் போல .என்னிடம் இருந்த  சிகரட்  எல்லாம்  முடிந்து விட்டது .கொரியாக் காரன்  12 பெப்சியும்  5 கிலோ  நெய்மீனும்  தந்தான் அன்பளிப்பாக?. டீசல்  அடித்து  முடிந்தது கரைக்கு திரும்பும் போது   கேப்டன்  உம்மர்  சொன்னார்  " போன மாசம்  இந்த கொரியா  கப்பலில்  ஒரு  மர்டர்   நடந்துச்சு"    " கொலை செய்து   பிரீசர்ல  பாடிய போட்டுருக்கான் "  கேஸ்  நடப்பதாக  கூறினார் .நான்  வெல வெலத்து போனேன் .  பாவம்  அவனுக்கு  யார் யார்  காத்திருப்பார் களோ ?

Thursday, October 18, 2012

தூங்கப்போறேன் !

நான் பகரின்  சென்றபின்  முதல்  இருமாதங்கள்  எனக்கு  வேலை  கிடைக்க வில்லை .Free  விசா  எனப்படும்  முறையில்  சென்றதால்  எங்கு வேண்டுமானாலும்  வேலை தேடலாம் .ஒருநாள்  அவ்வாறு  வேலை தேடித் தேடி  அலைந்த களைப்பில்  சிறிது நேரம்  தூங்கலாம்  என்று எனது அறைக்கு வந்தேன் . நீண்டநாட்களாக  வேலை  தேடி அலைந்த நான்  எனது அறையில்  சட்டை மாட்டுவதற்கு  ஒரு ஆணி அடித்தேன் .அதற்க்கு கூட நேரமில்லாமல்  வேலை தேடி அலைந்துள்ளேன் .
ஆணி அடிக்கும்  சப்தம் கேட்டு  பக்கத்து  அறை  மலையாளி  நண்பர்கள்  எனது அறைக்கதவை  தட்டினார்கள் .நான் நினைத்தேன்  நம்ம ஊருலதான்   வாடகை வீட்டு சுவரில்  ஆணி அடிச்சா  வீட்டுக்காரர் பிரச்சனையை  கிளப்புவார்  இங்கேயுமா ? என்று நினைத்தேன்  ஆனாலும் நான் விடுவதாக இல்லை . இன்று  ஆணி அடித்தபின் தான்  கதவை  திறக்க வேண்டும்  என்று முடிவெடுத்தேன் .
      அவர்களும்  விடுவதாக இல்லை,தொடர்ந்து  கதவு தட்டப்பட்டது . ஒரு ஆள்  மட்டும்  சத்தமாக கேட்டார்    "உள்ளே என்ன செய்கிறாய் ?" என்று
நான் "  நான் தூங்கப்போறேன்  ஆணி அடிக்கிறேன்  என்று சொன்னேன். அவ்வளவுதான்   அனைவரும்  தூங்காதே !   தூங்காதே ! !  என்று  கூச்சலிட்டனர் . இதற்குள்  எனது  அண்ணனிடம்  தகவல்  சென்றது  அவரும் பதறி  அடித்துக்கொண்டு  வந்துவிட்டார் . சரியாக  அந்நேரம்  கதவை திறந்தேன் .
அனைவரும்  என்னை சூழ்ந்துகொண்டு  அறிவுரை  சொல்ல  ஆரம்பித்து விட்டார்கள்  இவ்வாறு    " தம்பி உனக்கு வேலை கண்டிப்பாக கிடைக்கும் " ,       " இதற்க்கெல்லாம்  சாகத் துணியலாமா ?"  என்று
      அடப்பாவிகளா !  நான் என்ன  தற்கொலைக்கா   முயற்சி பண்ணினேன் ?  என்று கேட்டேன் . பிறகுதான்  தெரிந்தது  தூங்கப்போறேன்  என்றால்  தூக்கு மாட்டிக்க  போறேன்  என்று  மலையாளத்தில்  பொருள் என்று .
        பிறகு  அவர்களிடம்  சொன்னேன்  இவ்வாறு    " சரி  சரி   இப்ப  சொல்றேன்   கொஞ்சநேரம்  நிம்மதியா  தூங்கப்போறேன் !"


Friday, October 12, 2012

கனவு

     
                                கனவு 
    அன்று டக்குத்தெரு  மாரியம்மன்  கோவிலில் இருந்து  பூசாரி  காளிமுத்து  வந்திருந்தார்  எனது வீட்டிற்கு .

அவர் வந்த காரியம் இதுதான் , பூசாரியின் கனவில்  மாரியம்மன்  தோன்றி  என்  அம்மா  ஒரு குடம்  பால்  கொண்டுவருவது போல்  கனவு  கண்டாராம் . அதுபோல்  செய்யவேண்டும்  என்று  அறிவுறுத்த  வந்ததாக  கூறினார் .எனக்கு  சிரிப்பு வந்தது  ஆனால்  அடக்கிக்கொண்டேன் . பெரியவர்கள்  பேசும்போது  குறுக்கே பேசக்கூடாது  என்று  அம்மா  முன்பு  கூறியிருக்கிறார் .
   பூசாரி  போன பிறகு  அம்மாவிடம்  சொன்னேன்  இது  மூட நம்பிக்கை ,அவ்வாறு  செய்யவேண்டாம்  என்று  ஆனால்  அம்மா  என் பேச்சை கேட்கவில்லை . அவ்வாறு  செய்யாவிடின்  மாரியம்மன்  பலி வாங்கிவிடும்  என்று  சொன்னார்கள் . இதையும் பூசாரிதான்  சொல்லியிருக்க  வேண்டும் .
         அதுவும்  பித்தளை  குடத்தில் தான்  பால் கொண்டுவரவேண்டும்  என்று  சொன்னதாக  அம்மா  என்னிடம்  கூறினார் .இந்த நேரத்தில்  அந்த பூசாரியின்  ஞாபக  சக்தியை  மெச்சினேன் ! காரணம்   அந்த  பால் குடம்  எவர்சில்வரா ?  பித்தளையா ? என்று கனவில் கூட அந்த பூசாரி கவனத்தில் கொண்டுள்ளார்  அதனால்  கும்பகோணம்   சென்று  ஒரு பித்தளை  குடம்  வாங்கினோம் .
மறுநாள்  மாரியம்மன் கோவிலுக்கு சென்று  அவர் கூறியபடி  பால் குடத்தை  ஒப்படைத்து ,மாரியம்மன்  ஆசையை (?)  நிறைவேற்றி  அருள் பெற்று வந்தோம்(?) ! !
   மனிதனின்  ஆசையை  அவரவர்  பேச்சில்  அறியலாம் . ஆனால்  இறைவனின் ? ஆசையை அறிவது கடினம்  ,இது போல  பூசாரிகளின்  மூலமாகத்தான்  தெய்வம்  தெரிவிக்கும்  என்று  என் அம்மா நம்பிவந்தார் .

       நாம் காணும்  கனவுகள்  மெய்ப்பட வேண்டும் என்று  எல்லோரும்  விரும்புவது  இயல்புதான். ஆனால்  நல்ல கனவுகள் மட்டும்  நடக்க வேண்டும் என்று  நினைப்பது  சுயநலம்  என்று நான் நினைக்கவில்லை .நான் ஒருநாள்  கண்ட கனவு  ஒரு பெரிய பயத்தை உண்டாக்கியது ,நான்  தேம்பித் தேம்பி  அழுகிறேன்,என்னை சுற்றி  என் உறவினர்  உடன்பிறப்புக்கள்  அனைவரும்  அழுகின்றனர் .இவ்வளவு ஏன் அங்கு  பிணமாக  கிடப்பது கூட  நான்தான் ,என்  சாவிற்கு  நான் அழுவது  கனவில் மட்டுமே நடக்க கூடியதுதான் .அதனால்  பயம் தெளிந்தது .
ஒருநாள்  எதோட்சையாக  மாரியம்மன்  கோவில் வழியாக சென்றபோது  கோவில் குளத்தில் பூசாரி  குளித்துக் கொண்டிருந்தார்  நாம் வழங்கிய  குடத்தைப் பயன்படுத்தி . இதை  அம்மாவிடம்  சொல்லவில்லை  ஆனால்  வேறொன்று சொன்னேன்   
    " நம்ம நேரம்   பூசாரி  பால் குடத்தை மட்டும் தான்  கனவு கண்டார் !  அல்லாமல்  கோவில்  கட்டுவதுபோல்   கனவு வரவில்லை !.

Friday, September 28, 2012

இட்டி ! பாஞ்சாறு !

இட்டி !   பாஞ்சாறு !

தொட்டில் பழக்கம்  சுடுகாடு மட்டும்  என்பார்கள் .அது  சரியான   பழமொழி  என்றே  எனக்கு தோன்றுகிறது .ஏனென்றால்  இதுவரை  அப்படி  சில பழக்க வழக்கங்கள்  மாறாமல் உள்ளது. குறிப்பாக  உணவு பழக்கம் .தினமும் காலையும் இரவும்   இட்லி  சாப்பிடுவது   எனக்கு  பிடித்தமான ஒன்றாகும். இருபது   வருடமாக  இவ்வாறு  சாப்பிட்டு  வருகிறேன்  ஆனாலும் அலுப்பு  ஏற்படுவதில்லை .
கும்பகோணத்தில்  வாழ்ந்து  வந்தபோது  , அங்கு  மிகவும் SOFT  ஆன இட்லி   கிடைத்தது. அங்கு  மல்லிகபூ  இட்லி  என்பார்கள் .சில சமயம்  உணவகங்களில்  25 இட்லி வரை சாப்பிட்டதுண்டு. இன்றோ  6 க்கு  கூடுதல்  சாப்பிட  முடிவதில்லை ,ஆனாலும்  இட்லி மட்டுமே எனக்கு   விருப்ப உணவு .
    கோயமுத்தூரில்  சிலகாலம்  இருந்த பொது  அங்கு குஷ்பு  இட்லி  விருப்பமானது .நடிகை  குஷ்பு  எனக்கு  பிடித்த நடிகை அல்ல .அனால்  குஷ்பு  என்ற  பெயர் கொண்ட  அந்த  வகை இட்லி எனக்கு பிடித்துவிட்டது .மற்றபடி  பெயர் காரணத்தை  நான் அறிந்து கொள்ள விருப்பபடவும் இல்லை
    நீண்ட நாள் காணமல் இருந்து   திடீரென்று  சந்திக்கும் சில நண்பர்கள்  என்னை கேட்பதுண்டு    " என்ன  மாப்ள  இப்படி  சத  போட்டுட்ட !, இட்லி மாறி உப்பிபோயிட்ட  "  " தொப்பைய  குறச்சுக்கோ" என்று  கேட்டு  அலுத்து போய்விட்டது  .இட்லியை  குறைத்து விட்டேன்   ஆனால்   தொப்பை மட்டும்  குறையவில்லை .
ஜீன்  என்பார்களே  , நமது  பழக்க வழக்கம்  நமது  குழந்தைகளுக்கும்  வரும் என்று கேட்டதுண்டு  இப்போது  உணருகிறேன் . எனது ஒன்னேகால் வயது   மகன்  கேட்கத்தொடங்கிவிட்டான்  இட்லி  சாம்பாரை , எப்படி என்று  கேட்கிறீர்களா ?  தலைப்பை  மீண்டும்  வாசியுங்கள் ..

Saturday, July 28, 2012

தூ (து) க்கத்தில் நடந்தேன் !

தூ (து) க்கத்தில்  நடந்தேன் !
தூக்கத்துல  நடக்கின்ற  வியாதி பற்றி  கேள்விப்பட்டு  இருப்பீர்கள் .நானும்  தூக்கத்தில்  எழுந்து நடப்பதுண்டு .பத்து ஆண்டுகட்கு முன்  தினமும்  இரவில்  2 மணியளவில்  என் வீட்டு  முன் கதவு  திறந்து  வெளியில்  சென்று  உலாவிவிட்டு வருவேன் . இதை என் அம்மா  கண்டுபிடித்து  சொல்லித்தான்  எனக்குத் தெரியும் . அதுமட்டுமல்லாமல்  நான் தூக்கத்தில்   யார்  எது கேட்டாலும்  எடுத்து  கொடுத்துவிடுவேன் . இன்னார்தான்   இதை  என்னிடம் இருந்து  பெற்றார்கள்  என்ற  நினைவு  கூட  இருக்காது .
ஒருநாள்  அவ்வாறு  நான் தூக்க கலக்கத்தில்  இருந்தபோது , என்னிடம்  VCR  ஐ  பெற்றுக்கொண்டு  ஒரு நண்பர்  சென்று விட்டார் . ஆனால்  அவர்  யார் ?  என்று  தெரியவில்லை . நன்றாக  யோசித்துப் பார்த்தும்  நினைவுக்கு  வரவில்லை .சில நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன் ,அவர்கள்  வாங்கவில்லை என்று சொன்னார்கள் .அதுமட்டுமல்லாமல்  இதுபற்றி  யாரிடமும்  சொல்ல  வேண்டாம் என்றனர் . வாங்கியவர்  தானாகவே  தரும் வரை காத்திருக்க  சொன்னார்கள் .  காத்திருந்தேன் .
இருந்தாலும்  நான்   தூக்கத்தில்  நடப்பது  எனக்கு  ஒரு பயத்தை  உண்டாக்கியது . உறக்கம்  என்பது  இறைவன்  தந்த  வரமாகவே நான் கருதுகிறேன் . காரணம்  இன்றைய  காலகட்டத்தில்  எத்தனை பேர் தூக்கம்  இன்றி  தவிக்கின்றனர்  என்பது  கண் கூடாக  காணலாம் . ஒவ்வொருவர்க்கும்  ஒவ்வொரு  கவலை , சிலருக்கு  வியாதியின் காரணமாக  உறக்கமின்மை ,  சிலருக்கு  வயது  முதிர்வு  காரணமாக  உறக்கமின்மை ,சிலருக்கு  பயம்  காரணம் ,சிலருக்கு  பணம்  காரணம் .
      பல  சமயங்களில்   பகலில்  கூட  அருமையான  தூக்கம் வரும் ,தூங்கியிருக்கிறேன் .ஒவ்வொரு முறை  தூங்கி எழும்போது   ஒரு  சுகம் . 2003  இல்  கோயம்புத்தூர்  ஜிம்சன்   வாட்ச் கம்பனியில்  வேலை  பார்த்தபோது , நண்பர்  நிவாஸ் கான்   தினமும்  2 மணிக்கு பிறகு  நல்ல தூக்கம் போடுவார்  பணியில்?  இருக்கும் போது  தான் . நான்  சொல்வேன்  " தூங்குங்க!   நிவாஸ்  தூங்குங்க !  தூக்கம்  என்பது  இறைவன்  கொடுத்த வரம்"  என்று .
    அதைவிட   மஸ்கட்டில்  இருந்தபோது   கடின  உடல் உழைப்பு  , எப்போது  1 மணியாகும்  என்று  காத்திருப்பேன் ,1 மணிக்கு  சாப்பிட்டு முடித்து  சிறிது நேரம்  தூங்குவேன் . இரண்டு மணிக்கு  மீண்டும்  வேலை  தொடங்கும் .
ஆனால்  தற்போது  பகலில்  தூங்கும்  பழக்கம்  எனக்கு  அடியோடு  மாறிவிட்டது .ஏதாவது ஒரு ஞாயிறு  பகல்  தூங்கினால்  இரவில்  தூக்கம் வருவதில்லை .
    மீண்டும் VCR  மேட்டருக்கு  வருவோம் . அதுபோல்  ஒருநாள்  பகலில்  நல்ல தூக்கம்  4  மாதம் கழித்து  அந்த  நண்பர்   என்னை  எழுப்பினார் ,   VCR ஐ  திருப்பி  தந்துவிட்டு  சென்று விட்டார் .தூக்க கலக்கத்தில் மீண்டும்   தூங்கிவிட்டேன் .
நன்றாக  தூக்கம்  கலைந்தபின்   யோசித்துப் பார்த்தேன் . VCR  ஐ  திருப்பி தந்தது  யார் ?  இன்றுவரை   அது  புதிர் தான் !.

Thursday, July 5, 2012

குறுஞ்செய்தி

நல்லது கெட்டதுக்கு நாலு பேரு வேணும்  என்பார்கள் .எனக்கு குறைந்த அளவு  நண்பர்கள்  இருந்த போதும் ,நாலு பேர்  நெருக்கமான  நண்பர்கள்  இருந்தனர் .ஆனால் அவர்கள் இருக்கும் இடம்தான்  தொலைவு .
கேரளா  வந்து தங்கிவிட்டதால்  அவர்களும் இங்கு வருவதில்லை  நானும் கோவை செல்லும்போது  அவர்களை காண முடிவதில்லை . ஆனாலும் எனது  திருமனத்திற்கு அவர்களை  அழைத்தேன்
மின் அஞ்சலில்  அழைப்பிதல்  அனுப்பினேன் ,செல்பேசியில் குறுஞ்செய்தியும்  அனுப்பினேன் .
  தற்காலத்தில்  குறுஞ்செய்தி  மிக பயனுள்ளதாகவே  நான் உணருகிறேன். பழைய  நாட்களில்  நண்பர்களுக்கு கடிதங்கள் பல எழுதியதுண்டு .அது ஒரு சுகமான  அனுபவம் . இக்காலதவர்க்கு
அது கிடைக்க வாய்ப்பில்லை .
பல நாட்கள்  யாரிடமிருந்தோ வரும் கடிதத்திற்கு  காலைமுதல் தபால்காரரை  காத்திருந்து ,அவர் 
நம்மை  கடந்து போகும் வரை  கண்கள் அசைவற்று இருந்துள்ளேன் . சில சமயம் எங்காவது  சென்று  பின் வீடு திரும்பும்போது  கடிதம் எதாவது ? என்று  வினவுவேன் . தற்போது கூட  சிலசமயம் கடந்த காலத்தில் நண்பர்கள் அனுப்பிய  கடிதத்தை  மீண்டும்  எடுத்துப் படித்துப் பார்ப்பேன். குறுஞ்செய்தியில்  உடனுக்குடன்  தகவல் சென்று சேர்க்கிறது ,மற்றபடி  அன்பை அதிகமாக  பரிமாறிக்கொள்ள முடிவதில்லை .சில குறுஞ்செய்திகள்  பலருக்கு ஒரே சமயத்தில் அனுப்பப் படுகிறது .அதில் பல  கருத்துக்கள்  இருந்தாலும் , அதை முதலில் எழுதியது யார் ? என்பது  விடை  இல்லா கேள்வி .

       கடிதம் என்றவுடன்  மனது எங்கோ சென்று விட்டது .மீண்டும் நம்ம கதைக்கு வருகிறேன் .அந்த  நான்கு நண்பர்களுக்கு  மீண்டும்  ஒரு  நினைவூட்டல்  குறுஞ்செய்தியை இவ்வாறு அனுப்பினேன்
" அன்பு நண்பரே ! எனது  திருமணம்  வரும் 18 .01 .2009 .இது ஒரு நினைவூட்டல்  தங்கள் வருகைக்கு காத்திருக்கும் நண்பன் "
ஆனால் அந்த நால்வரும் வரவில்லை ஏதோ காரணத்தால் .நால்வருக்கும்  நாலு காரணங்கள் இருக்குமல்லவா .
ஆனாலும் திருமணம் முடிந்தபின்  என் நன்றி  குறுஞ்செய்தியை தவறாது  பின்வருமாறு   அனுப்பினேன்   "  எனது  திருமனத்திற்கு வந்து  வாழ்த்திய  அன்பு  நெஞ்சத்திற்கு எனது  மனமார்ந்த நன்றி " .

சிறுகுறிப்பு : ஒருவேளை  அவர்கள் வந்திருந்தால்  எனது குறுஞ்செய்தியின்  கடைசி  மூன்று  எழுத்துக்களை  மட்டுமே அனுப்பியிருப்பேன் .இந்த குறுஞ்செய்தியை கண்டு ஒரு நண்பர் மட்டும் செல்பேசியில் அழைத்து  இப்படி சொல்லி விட்டார்  " நண்பா  நாக்க புடுங்கறமாதிரி  மெசேஜ்  அனுப்பிட்ட  , இதுக்கு என்னை செருப்பால்  அடித்திருக்கலாம் " என்று .
நான் சொன்னேன்  "  மன்னிக்கவும்  நண்பா  ராங் கால் போன்று இது  ராங்  sms  திருமனத்திற்கு  வந்தவர்க்கு  அனுப்பியது   உங்க பேருக்கும்  ஆட்ஆயிடுச்சு ."
  

Friday, June 29, 2012

சர்டிபிகட்

எனது  பத்தாம் வகுப்பு  தேர்வு  முடிந்து ரிசல்ட்  வந்த சமயம்  . நான்  தேறிவிட்டேன்  எனது  நண்பன்  ராம் குமாரோ  தவறிவிட்டான். அவனது  சித்தப்பா அவனை  கேலி  செய்தார் , அதற்க்கு  அவனோ  " சர்டிபிகட்  வச்சிக்கிட்டு   நாக்க வடிக்கறதா ?  " என்று  கேட்டு விட்டான்.  பிறகு
1999 இல்  கோனேரிராஜபுரம்  அக்கரை தெருவில்  இருந்து  கோயமுத்தூர்  சென்று  விட்டோம் .  மூன்று  ஆண்டுகள்  கழித்து   கோனேரிராஜபுரம் வந்தேன் ,கொஞ்சம்  வேலை இருந்தது அங்கு . அப்போது  சில   நண்பர்களை  கண்டு  நலம்  விசாரித்தேன் . அப்போது  ஒரு கிராம வாசி சொன்னார்   "உன் தோழன்   நம்ம  ராம்குமார்  கம்ப்யூட்டர்  படிக்க   கும்பகோணம்  போரம்பா " படிச்சு முடிச்சா  மலேசியா  வில்  வேலை கிடைக்கும்னு  சொன்னார் .
எனக்கு  அதிசயமாக  இருந்தது , இருந்தாலும்  கம்ப்யூட்டர்  படிப்பது  நல்ல விஷயம் தானே !  எனவே  சந்தோஷப்பட்டேன் .
மறுநாள்   எதோட்சையாக  ராம்குமாரை  கண்டபோது   கம்ப்யூட்டர்  மேட்டரை பத்தி  கேட்டேன் .
  "மாப்ள  நான்  கம்பி பிட்டர் ட்ரைனிங்  தான் போறேன் " என்றான் . அதன் பின் மீண்டும்  நான் கோயமுத்தூர்  போய்விட்டேன் .
சரியாக  இரண்டு வருடம்  ஓமன்( மஸ்கட் )  சென்று  வந்தேன் . மீண்டும்  கோனேரிராஜபுரம்  சென்றேன் . அப்போது  மீண்டும்  நண்பர்களை  கண்டு  பேசியபோது  நம்ம  ராம்குமார்  மலேயசியாவில்  safety officer  ஆக  உள்ளதாக  சொன்னார்கள் . அவன்  எப்போது  அதற்க்கான   படிப்பை  முடித்தான்  என்று கேட்டேன்! , தொடங்கினால் தானே முடிப்பதற்கு ?.  பணம் கொடுத்து  certificate  வாங்கியதாக  சொன்னார்கள் . எப்படியோ  நம்ம  நண்பன்  வெளிநாட்டில்  நல்ல வேலையில் இருந்தால் நல்லதுதான் .
ஆனாலும்  சர்டிபிகட்  என்பது  நாக்கு வடிக்க அல்ல  என்பது  தற்போது  புரிந்திருக்கும் .